மாரிதாஸ் கைதுக்கு மார்பில் அடித்துக் கொண்டு கதறுகிறார்கள் சங்கிகள். கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது என தமிழக பாஜக தலைவர் கொதிக்கிறார்.
கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் ஆட்சியின் நிலை என்ன தெரியுமா? கருத்துச் சொன்னார்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் தனிநபர்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து வழக்குகளை போட்டு வருகிறது மோடி அரசு.
கருத்துகளை வெளியிட்டதால் கடந்த ஓராண்டில் 154 பத்திரிகையாளர்களை கைது செய்திருக்கிறது மோடி அரசு. வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் 8 பேர் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் பத்திரிகையாளர்கள் மீதான நேரடியான வன்முறை தாக்குதல்கள் எண்ணிக்கை மட்டும் 198. கடந்த பத்தாண்டுகளில் செய்தி வெளியிட்டமைக்காக 56 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறார்கள். ராமர் கோயில் பற்றி ஒரு ட்விட் போட்டதற்காக பிரஷாந்த் கனோஜியா 80 நாட்கள் சிறையில் இருந்தார். விவசாயிகள் போராட்டத்தைச் செய்தி சேகரித்தற்காக எட்டு பத்திரிகையாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ஒரே ஆண்டில் மிக அதிகமான அளவில் இன்டர்நெட் ஷட்டவுன் என்கிற இணைய முடக்கத்தைச் செய்த பெருமை மோடி அரசுக்கே உண்டு. 64 முறை இணையத்தை முடக்கி கருத்துரிமையைக் கருவறுத்திருக்கிறது. காஷ்மீரில் ஓராண்டுக்கு மேலாக இணைய வசதி முடக்கி வைத்திருந்தார்கள். கடந்த ஏழு ஆண்டுகளில் கௌரி லங்கேஷ் உள்ளிட்ட 16 பத்திரிகையாளர்கள் தங்களுடைய செய்திகளுக்காகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மூடநம்பிக்கையை எதிர்த்து அறிவியல் கருத்துக்களை மக்களிடம் விதைத்த நரேந்திர தபோல்கர், மதச்சார்பின்மையே நமது வரலாறு, எனப் பதிவு செய்த கோவிந்த் பன்சாரே, எழுத்துக்களின் மூலம் மூடநம்பிக்கைக்கு எதிரான அறிவியல் மற்றும் முற்போக்கு கருத்துக்களை வளர்த்த கல்புர்க்கி ஆகியோர் சங்கிகளால் கொல்லப்பட்டனர். கருத்துச் சுதந்திரம் பேசியவர்கள் கருத்தால் பதில் சொல்லாமல் துப்பாக்கியில் இந்துத்துவா தோட்டாக்களால் துளைத்தார்கள். தமிழகத்தில் பெருமாள் முருகனையும் விட்டு வைக்கவில்லை.
2016-ல் Freedom of speech index-ல் மொத்தமுள்ள 180 நாடுகளில் 133-வது இடத்திலிருந்த இந்தியா 2021-ல் 142 இடத்திற்குப் பின்தங்கியது. இருக்கிறது. இந்தியாவின் கருத்துரிமை சர்வதேச அளவில் சந்தி சிரித்தது மோடி ஆட்சியில்தான். பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் என 37 தலைவர்களின் பெயர்ப் பட்டியலையும் அந்த அமைப்பு வெளியிட்டது. அதில் மோடியும் இடம் பெற்றார். பிரதமர் மோடியை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டதற்காக ஷியாம் மீரா சிங் என்பவர் ஆஜ்தக் செய்தி சேனலில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். ‘மோடி வெட்கமில்லாத பிரதமர்’ என்று அவர் போட்ட ட்விட்டுக்காக தண்டிக்கப்பட்டார்.
2018-ல் தமிழகத்தில் பல ஊடகவியலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். குறிப்பாக, எஸ்.வி.சேகர் பெண் ஊடகவியலாளர்களை ஆபாசமாகப் பேசியதற்கு எதிராகப் போராடியதற்காக நியூஸ் 18 தொலைக்காட்சி நிர்வாகம் பல ஊடகவியலாளர்களைப் பணி நீக்கம் செய்தது. தமிழக ஊடகவியலாளர்கள் மீது அவதூறு பரப்பி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்ப்பந்தித்து, பின் வாசல் வழியாக சங்கிகளை புகுத்த முயன்றது காவி கும்பல். அதற்காக மாரிதாஸ் களமிறக்கப்பட்டார். அந்த மாரிதாஸ் இப்போது கைதானதும் கருத்துச் சுதந்திரம் என்கிற கேடயத்தைத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.
மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் அவர் தத்தெடுத்த கிராமத்தில் கொரோனா ஊரடங்கில் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களைப் பதிவு செய்ததற்காக ஸ்க்ரோல் இணைய தளத்தின் நிர்வாக ஆசிரியர் சுப்ரியா சர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஊரடங்கின் போது மக்கள் படும் துயரங்களையும், அரசு இயந்திரத்தின் நிர்வாக சீர்கேடுகளையும் அம்பலப்படுத்தியதற்காக இந்தியாவில் 53 ஊடகவியலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் தொடுக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்தது 10 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோடியைப் பற்றி கருத்துச் சொன்னதற்காக வீரபாண்டியனை சன் டிவியில் வெளியே அனுப்பப்பட்டார். விமானத்தில் பாஜக தமிழிசைக்கு எதிராக ‘’பாசிச பாஜக ஒழிக’’ எனக் குரல் கொடுத்தற்காக சோபியாவை சிறையில் அடைத்தார்கள். இவர்களின் கருத்துச் சுதந்திரம் என்ன தெரியுமா? ‘’1947-ல் இந்தியாவுக்கு கிடைத்தது பிச்சை. 2014-ல் மோடி பிரதமர் ஆன ஆண்டுதான் உண்மையான சுதந்திரம்’’ எனச் சொன்ன நடிகை கங்கனா ரணாவத்தின் கருத்து போராளிகளுக்குத்தான் இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுப்பார்கள்.
முப்படைகளின் தலைமை தளபதியின் மரணத்தைக் கொச்சைப்படுத்தியிருக்கிறார் மாரிதாஸ். பிபின் ராவத்தின் மரணத்தைவிட மாரிதாஸின் மானம் முக்கியம் ஆகிவிட்டது அண்ணாமலைக்கு! இவர் எப்படி ஐபிஎஸ் தேறினார். மாரிதாஸ் போட்ட ட்வீட் அவதூறு என்பது சட்டம் தெரியாதவர்களுக்கு கூட தெரியும். ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை அரசியல்வாதி ஆனதும் மாரிதாஸ் உத்தமராகத் தெரிகிறார்கள். இவர்கள் கருத்துரிமை களவாணிகள்.